திருமண அழைப்பிதழை மேசையில் வைத்துவிட்டு, போயிட்டு வாறேன்டி சிவா காத்திருப்பான் என்று சொல்லிவிட்டு பறப்பாய் பறந்தாள் சித்திரா. அவளை வழி அனுப்ப ஒரு
வார்த்தை கூட பேசாது மெளனமாய் இருந்தேன்.
இரண்டு மாதமாய் என்னோடு இந்த மெளனம்,
இப்படியே ஒரு வித தனிமை குடிகொண்டது காரணம் எனக்கு மட்டும் தெரிந்த உண்மை.
என்னோடு, என்மனதோடு காதலனாய், காவலனாய் வாழ்ந்த சிவா சித்திராவை காதலிக்கிறான் என்ற செய்தி எனக்குள் இருந்த துடிப்பு, சுறுசுறுப்பு எல்லாத்தையும் பறிச்சுக்கொண்டு போன மாதிரி ஒரு உணர்வு. அவன் எனக்கு என்று எண்ணிய நான் ஏனோ அவனுக்கு நான் தானா என்று பார்க்க மறந்துவிட்டேன்.
என்ர ஒரே ஒரு சிநேகிதி சித்திரா அவளிற்கு கூட தெரியாமல் எல்லோ அவன் எனக்குள் வாழ்ந்தவன். இரண்டு மாசத்திற்கு முதல் அவன் சித்திராவிற்கு தன் காதலைத்தெரிவிக்கும் படி என்னிடமே வந்து தூது சொன்னான் என்ர உயிரை யாரோ பறிச்ச மாதிரி தெரிஞ்சுது. சிரித்து சிரித்து கலா கலா என்று பேசுவானே.
நீ வா போ என்று என்னோடு தடையின்றி பேசுவான், இந்த உரிமையை நான் யாருக்கும் இருவரை கொடுத்ததில்லையே. சித்திராவைவிட என்னோடு தான் அவன் அதிகம் பேசுவான். சித்திராவை கூட வாங்கோ, போங்கோ என்று அந்நியமாய் கூப்பிடுவானே. என்னோடு தான் அத்தனை நெருக்கம். அதனால் தான் அவன் எனக்குள் வந்தான். ஆனால் ஆனால் சித்திராவிற்காய் தான் அவன் என்னோடு நெருக்கமானான் என்பதை, அவன் காதலிற்கு தூது செல்லச்சொன்ன போது தான் நான் தெரிந்து கொண்டேன். சித்திரா கூட அவன்ர காதலை மறுக்கவில்லை அவன் சொன்னவுடன் எதிர்பார்த்திருந்தவள் போல சம்மதம் சொல்லிவிட்டாள்.
ஒரு வேளை இது தான் உண்மைக்காதலா தெரியவில்லை சிவாவின் உணர்வு சித்திராவிற்கு இருந்தது. ஏன் என்ர உணர்வு சிவாவிற்கு வரவில்லை காரணம் தெரியவில்லை, அதற்காய் அவன் உணராததால் என் காதல் பொய்யென்று எப்படிச்சொல்ல முடியும். கொப்பி கொப்பியாய் 2 வருசம் அவனுக்காய் கவிதை என்ற பெயரில நான் எழுதியவற்றையும், அவன்ர பெயரையும் தேடித்தேடி அழிச்சனே என்ர மனம் அப்ப என்னை அறியாமல் அழுதிச்சே இதெல்லாம் பொய்யா? என் நண்பிக்காய் இவற்றை அழிக்க தான் என்னால் முடிந்தது மனசில எப்பவும் அவன் இருப்பான் என்று தான் நினைக்கிறன். ஒரு வேளை இதை யாருக்கும் முதலில சொல்லியிருந்தால் சிவாவை நான் இழந்திருக்க மாட்டேனோ என்று நினைக்கிறன்.
அவன் என்னை காதலிக்காட்டால் என்ன நான் காதலிச்சது அவனை அந்த நின்மதி போதும் எனக்கு. ஆனால் அவனும் சுயநலக்காரணா இதுவரை எப்படிப்பழகினவன். இப்ப நலம் கூட விசாரிக்க சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. சந்தர்ப்பம் கிடைக்கவில்லையா இல்லை அவன் தவிர்க்கிறானா தெரியவில்லை. இப்ப கூட சித்திராவின் கலியாணத்திற்குரிய வேலைகளை செய்யத்தான் சித்திராவீட்டை வந்தன்.
ஆனா ஆனா இது சிவாவின் கலியாணமும் கூட. அவர்கள் காதல் வென்றிச்சா? என் காதல் தோத்ததா? காதலின் வெற்றி என்றால் என்ன கலியாணத்தில் முடிவதா? அப்படி என்றால் நான் தோர்த்தவள் தானே? தேற்றது என் நண்பியிடம் என்ற நினைவில் அவனது திருமண வேலையில் இறங்குகிறேன்
No comments:
Post a Comment